காத்தான்குடியில் முகக்கவசம் அணியாது பயணித்தவர்களை எச்சரித்த பொலிஸார்
மட்டக்களப்பு - காத்தான்குடி நகரில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்ற போது முகக்கவசம் அணியாது பயணித்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நளனசிறி தலைமையில் பொலிஸ் குழுவினர் இந்த திடீர் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று மாலை 6 மணிக்கு காத்தான்குடிநகர் சந்தியில் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீதியால் மோட்டர்சைக்கிள், முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களில் முகக்கவசம் அணியாது பயணித்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோரைப் பிடித்து சுமார் அரை மணிநேரம் தடுத்து நிறுத்தி கடுமையான எச்சரிக்கையினை வழங்கியுள்ளனர்.
அத்துடன் மீண்டும் முகக்கவசம் அணியாது பயணித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.





