கொழும்பில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள், கைத்தொலைபேசிகள் கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொழும்பு துறைமுக கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவச் சிப்பாய் ஒருவரின் பணப்பையையும் கைத்தொலைபேசியையும் திருடிவிட்டு பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது, இராணுவ சிப்பாய் பயணிகளின் உதவியுடன் அவரை பிடித்து பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி கொழும்பில் இருந்து கடவத்தை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தில், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவரின் பணப்பையை இந்த கான்ஸ்டபிள் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல தயாரானார்.
குறித்த கான்ஸ்டபிளை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் போதே அவர் பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்ட போது, பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், இந்த நபர் தனது கைத்தொலைபேசியை கொள்ளையடித்ததாகவும் கூறி அவரை பலமுறை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய - மீதொட்டமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 15ஆம் திகதி சுகததாச மைதானத்திற்கு அருகில் பேருந்தில் இருந்து போது தனது கைத்தொலைபேசியைத் திருடிவிட்டு ஓடியதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பேலியகொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் பேருந்தில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.