யாழ். அரியாலை சித்துபாத்தி மயானத்தில் இருளில் தங்கும் பொலிஸார்
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிஸார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் சித்திப்பாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு அசெளகரியங்கள்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியும் அந்த பகுதியை பார்வையிட்டு சென்றார்.
குறித்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு பொலிஸார் 24 மணித்தியாலமும் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மயானத்தில் உணவு உண்பதில் இருந்து தமது அன்றாட செயல்பாடுகளை இரவு நேரங்களில் மேற்கொள்வதற்கு மின்விளக்கு இன்மையால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபைச் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அது தொடர்பில் தாம் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |