றம்புக்கணயில் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த பொலிஸார்: நபரொருவர் நேரடி சாட்சியம்
றம்புக்கண சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியொன்றுக்கு பொலிஸார் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது பொலிஸார் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்ததைக் கண்டதாக ஒருவர் நேரடியாக சாட்சியமளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது இரண்டு பொலிஸாரும், இராணுவ வீரரொருவரும் வருகை தந்தனர். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு உயரமான, மெலிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தீ வைத்தார்.
இது தொடர்பிலான காணொளிகள் எதிர்வரும் தினங்களில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றம்புக்கண பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியதனால் பொலிஸார் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
றம்புக்கணயைச் சேர்ந்த 42 வயதுடைய கே.டி.லக்ஷான் என்பவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



