A/L பரீட்சையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்வு மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், வட்டார மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், வினாத்தாள் மதிப்பீட்டு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை கொண்டு செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
மேலும், பரீட்சை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் நடமாடும் ரோந்து மூலம் பரீட்சை நிலையங்களை உன்னிப்பாக அவதானித்து போதிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சை நாளை முதல் நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 331,709 பரீட்சார்த்திகள் பரீட்சையை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.