சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸாரே காரணம்.. ரவிகரன் எம்பி குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்ததார்கள் என சுட்டிக்காட்டினார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (03.07.2025) இடம்பெற்றது.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச்செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற முன்மொழிவொன்றை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் அபிவிருத்திக்குழுவில் முன்வைத்தார்.
சட்டம் ஒழுங்கு
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், "சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றது.
இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்ற போது, சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிசாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை இங்கு தெரிவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
தற்போது இந்த நாட்டில் ஆட்சிபீடத்திலுள்ள அரசும், அரசுத்தலைவரும் கூட இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர். நாமும் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.
ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டியுள்ளது. பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் உள்ளிட்ட, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வு செயற்பாடுகள் மற்று கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களோ எவையும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தனர். அதனை யாரும் மறுக்கமுடியாது“ என்றார்.






இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
