ஊடகவியலாளரிடம் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் கோரிய பொலிஸார்
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறு கேட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஊடகவியலாளர் இன்றையதினம் (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து "தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்" எனச் சிங்களத்தில் கேட்டனர். அதற்கு அந்த ஊடகவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார்.
ஊடகவியலாளராக இருந்தாலும் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் தேவை என்று அவருடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டார். அந்த ஊடகவியலாளர் தனக்கு முழுமையாகச் சிங்களம் தெரியாது என்றும் நீங்கள் பேசுவது விளங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அதற்கு அந்தப் பொலிஸார் ஊடகத்திற்குள் இருந்து கொண்டு சிங்களம் தெரியாமல் ஏன் இருக்கின்றீர்கள் எனக்கேட்டு சிறிது நேரம் விதண்டாவாதம் செய்துவிட்டு பின்னர் அவரை செய்தி சேகரிக்கச் செல்வதற்கு அனுமதித்தார்.
ஒரு தமிழ் பகுதிக்குள் தமிழே தெரியாத பொலிஸார் ஒருவர் தனியாகக் கடமையிலிருந்து தமிழ்பேசுபவர்களுடன் சரியான தொடர்பாடலைப் பேண முடியாமலும் ஊடகவியலாளரின் சுதந்திரத்தினை பறிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



