யாழில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய பொலிசார்
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிசாரின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை சீர்செய்தல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சுற்றுச்சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம் கோரிக்கை பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டு செல்லப்பட்டது.
யாசகம் பெறுவோர்
அத்துடன் யாழ் மாநகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். அதனடிப்படையில் யாழ் மாநகரின் ஒத்துழைப்புடன் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் பொலிசாரால் கைதுசெய்யப்படு யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாட்களில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.