பொலிஸ் சேவை குறி்த்து அதிருப்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவில் சேவையை விட்டு விலகிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் திணைக்களம் தற்போது மிகக் கடுமையான ஆளணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்தின் சாதாரண கடமைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு குறைந்தபட்சம் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது ஒட்டுமொத்த திணைக்களத்திலும் 50,000 க்கும் சற்று அதிகமான எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களே மட்டுமே பணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவி வரும் கடுமையான ஆளணி பற்றாக்குறை காரணமாக, சேவையில் உள்ள பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாகக் கடமையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொலிஸ் சேவையானது உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இடமாக மாறி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆள் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களமும் எதிர்காலத்தில் மிகப்பெரியதொரு வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகக் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதும், கடுமையான வேலைப்பளுவுமே அவர்கள் சேவையை விட்டு விலகுவதற்கு பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அதிக சம்பளம் பெறக்கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடிப் போவதற்கும், அதிக ஊதியம் கிடைக்கும் உள்நாட்டுத் தனியார் துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் பல உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்திலிருந்து பெருமளவில் பதவி விலகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சில இளம் உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதோடு, பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பல உத்தியோகத்தர்கள் அண்மைக்காலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஒழுக்கமற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு தற்போதைய பொலிஸ் கட்டமைப்பில் இடமில்லை என்பதால் அவர்களை உடனடியாக சேவையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களில் இவ்வாறு பெருமளவிலானோர் நீக்கப்பட்டமையும் இந்த ஆள் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாகும்.
தற்போதைய அரசாங்கத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் புதிய உத்தியோகத்தர்களைப் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த உத்தியோகத்தர்களை ஒரே தடவையில் திணைக்களத்திற்குள் உள்வாங்கி அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு தற்போதைக்கு போதிய வசதிகள் இல்லை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச துறைக்கு புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதால், பொலிஸ் திணைக்களத்திலும் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே இணைக்கப்பட்டனர்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டலின் கீழ் சில விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய பயிற்சிபெறும் உத்தியோகத்தர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் புதிய திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவும் போதிலும் அதற்கான ஏதுக்கள் தொடர்பிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கான ஏதுக்கள் தொடர்பிலும் பொலிஸ் திணைக்களம் அதிகாரபூர்வ தகவல்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri