புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்றுமாறு பொலிஸார் உத்தரவு
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகையில் உள்ள பெயரை அகற்றுமாறும் அல்லது குறித்த நபரின் சொந்தப் பெயரை வைக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றி வீதி என பெயரிடப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகக் கிளிநொச்சி பொலிஸார் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த பெயருக்குச் சொந்தமானவர் புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன், பின்னர் சமூக மட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரைப் பொதுமக்கள் சூட்டியதாகவும் விசாரணைகளின் போது பொலிஸாருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த வீதியானது பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லை. பொதுமக்கள் தாமாக முன்வந்து குறித்த வீதிக்குப் பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக நானும் கலந்து கொண்டேன் எனக் குறித்த விசாரணையில் தெரிவித்தேன்.
குறித்த வீதிப் பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைவாகத் தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.