பொலிஸ் பொறுப்பதிகாரியின் மோசமான செயல்
பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்ததாக கூறப்படும், பிரதான பொலிஸ் பரிசோதகர் தரத்திலான பொறுப்பதிகாரி ஒருவருக்கு எதிராகவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் சந்தேக நபரான பொறுப்பதிகாரி சுகவீனம் காரணமாக விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம்
இந்த தகாத முயற்சி சம்பவத்திற்கு பின்னர் காரணங்கள் ஏதுமின்றி குறித்த கான்ஸ்டபிள் பாயாகல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான கான்ஸ்டபிள், சம்பவம் குறித்து தனது சக காவலர்களுக்குத் தெரியப்படுத்தி விட்டு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இதுவரை பணிக்குத் திரும்பாததால், அவர் பணியை விட்டுச் சென்றதாகக் கருதப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் அதிகாலை வேளையில், பொறுப்பதிகாரி குறித்த கான்ஸ்டபிளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அவரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவழைத்துள்ளார்.
கட்டியணைக்க முயற்சி
அங்கு கான்ஸ்டபிள் நெருங்கி அவரை கட்டியணைக்க முயற்சித்துள்ளார். எதிர்பாராத இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்று தனது சக பொலிஸாரிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரியின் இந்த செயற்பாடு குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட கான்ஸ்டபிளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட பொறுப்பதிகாரி, கான்ஸ்டபிளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டமையை உறுதிப்படுத்துவதற்காக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுடன் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam