வவுனியாவில் மீண்டும் குடும்ப விபரங்களை திரட்டும் பொலிஸார் - மக்கள் மத்தியில் அச்சம்
வவுனியா - பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது படிவமொன்றினை வழங்கி விட்டுச் சென்றதுடன், இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதாகவும் குடும்ப விபரங்களில் உள்ளடக்கப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரிவிட்டுச் சென்றுள்ளனர்.
எவ்விதமாக தெளிவுபடுத்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு குடும்ப விபரங்களைக் கோருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முதல் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்ற பொலிஸார் வீடுகளில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொழில், தேசிய அடையாள அட்டையின் இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற முக்கிய தகவல்களைக் கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை வழங்கி வருவதுடன், அவ்விபரங்களைச் சேகரிப்பதற்கு மீண்டும் வருகை தரவுள்ளதாகவும், அப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி கையளிக்குமாறும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு பொலிஸார் குடும்ப விபரங்களை சேகரிப்பதற்கான காரணங்கள் தெரியாமல் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.