காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை - 20 பேர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடியில் வர்த்தக நிலையங்களிலிருந்தவர்கள் மற்றும் வீதிகளில் பிரயாணித்தோர்களில் முகக்கவசம் அணியாத 20 பேருக்கு மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்றைய தினம் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைப் பிரதேச செயலகங்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதையடுத்து காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறி தலைமையில் பொலிஸார் மற்றும் செட்டிபாலயம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை ஒன்றினை இரவு 7 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், வீதியால் பிரயாணித்தோர் உள்ளிட்ட 20 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வர்த்தக நிலையங்களில் அதிகளவான மக்களை உள்வாங்கிய வர்த்தகர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri