பருத்தித்துறை நகரசபையினுடைய 2022ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்
பருத்தித்துறை நகரசபையினுடைய 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் அதன் தவிசாாளர் திரு. இருதயராசா தலைமையில் இடம் பெற்ற சபை அமர்வில் 2022 ஆம் ஆண்டிற்குரிய பாதீடு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்காக விடப்பட்ட வேளை பாதீட்டிற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக ஏழு வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.
இதனால் அங்கு சமநிலை காணப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சபை செயலாளரால் வாக்கு சமமாக வருகின்ற சந்தர்ப்பங்களில் தவிசாளருக்கு ஒரு வாக்கு உண்டு என்ற அடிப்படையிலே தவிசாளர் தனது வாக்கை சபை பாதீட்டுக்கு ஆதரவாக வழங்கியுள்ளார்.
இதனால் ஒரு மேலதிக வாக்கினால் பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடைய 5 உறுப்பினர்களும், சமத்துவக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் ஆக மொத்தம் 7 பேர் வாக்களித்திருந்தனர்.
இதேவேளை எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரசினுடைய ஆறு உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக ஏழு உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
அண்மையில் பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய 4 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்த நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்து இருந்தமை பலராலும் விமர்சிக்கப்படுகிறது.