சுண்டிக்குளம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்த நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சுண்டிகுளம் தேசிய பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியான கோரமொட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 27.10.2022 அன்று அனுமதியின்று உள்நுழைந்து மணல் ஏற்றியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் வனஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்காகவும், இயற்கை வளங்கள்
பாதுகாக்கப்படுவதற்காகவும், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கென
ஒதுக்கப்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் இரண்டு உழவு இயந்திர சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகளும், இரண்டு உழவு இயந்திரங்களும் வன ஜீவராஜிகள் திணைக்கள் அதிகாரிகளால் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த 28.10.2022 அன்று முன்னிலை படுத்தப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திர சாரதிகளுக்கும் எதிர்வரும் 01.11.2022 திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வன ஜீவராஜிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.



