திருகோணமலையில் டிட்வாவால் சேதமடைந்த வீதி.. ஏற்பட்ட விபத்து
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியில் அமைந்துள்ள உப்பழத்து வீதியில், நேற்று (24) செங்கல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் காணப்பட்ட பாரிய பள்ளம் ஒன்றினுள் உழவு இயந்திரத்தின் பெட்டி சடுதியாக வீழ்ந்தமையே இந்த விபத்துக்குக் காரணமாகும்.
கட்டுமானப் பணிகளுக்காக செங்கற்களை ஏற்றி வந்த குறித்த உழவு இயந்திரம், உப்பழத்து வீதியூடாகப் பயணித்த போது, அங்கு புனரமைக்கப்படாமல் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் உழவு இயந்திரத்தின் பெட்டி ஒரு பக்கமாகச் சரிந்து விபத்துக்குள்ளானது.
உடைந்த வீதி
எனினும், இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நிலவிய டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் இவ்வீதி மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.

இருப்பினும், புயல் கடந்து நீண்ட நாட்களாகியும் குறித்த வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், "திக்வா புயலால் உடைந்த இந்த வீதி இன்னும் சீர் செய்யப்படவில்லை. பாதையில் உள்ள பெரிய பள்ளங்கள் காரணமாக வாகனங்கள் செல்வது பெரும் சவாலாக உள்ளது.
இவ்வாறான அலட்சியப் போக்கினாலேயே இன்றைய விபத்து நிகழ்ந்துள்ளது. இனியாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
தொடர்ச்சியாக இவ்வீதியில் விபத்துக்கள் நிகழும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வீதியை புனரமைக்க முன்வர வேண்டும் எனப் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri