பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இயந்திர மனிதர்கள் கிடையாது: வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இயந்திர மனிதர்கள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஒரே நாடு ஒரே தொழில் சட்டம் என்று இருந்த போதிலும் கூட, பெருந்தோட்ட மலையக மக்கள் அந்த தொழில் சட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அவர்களுக்கு ஒரு துண்டு காணி உரிமை கிடையாது. 2019 ஆம் ஆண்டில் தான பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 18,700 காணி உறுதிப்பத்திரம் மலையக மக்களுக்குக் கையளிக்கப்பட தயாராக இருந்த சூழ்நிலையில், தேர்தலைக் காரணமாக காட்டி அதைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
மலையக பெருந்தோட்ட காணிகள் பகிர்ந்தளிக்கப்படுமேயானால் மலையக இளைஞர், யுவதிகளுக்கோ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கோ பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் வெளியாட்களுக்கு ஒருபோதும் அதில் இடம் கிடையாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற ரீதியிலும் பெருந்தோட்ட மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் மலையக மக்களுக்காக ஒலிக்கும் எங்களுடைய உரிமைக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.