மக்கள் காணியை அபகரிக்கும் பெருந்தோட்ட நிறுவனம்: களத்தில் தடுத்து நிறுத்திய எம்.பி மனோ! (Video)
கொழும்பு- அவிசாவளையில் பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நேரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பற்றி கட்சி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, இன்று (20.07.2023) மனோ கணேசன் மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி முள்வேலி அமைத்து, அதற்குள் இயந்திரம் மூலம் மண்ணகழ்வு செய்து, குகுழி தோண்டி புதிய இறப்பர் கன்றுகளை நடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் முன், அவிசாவளை பிரதேச செயலகத்துக்கு சென்று பிரதேச செயலாளர் சந்தித்த மனோ எம்பி, மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி உள்ளதாக பிரதேச செயலாளரை குற்றம் சாட்டியுள்ளார்.
பெரும் ஆபத்தை சந்தித்த மக்கள்
இந்த விடயம் பற்றி மனோ கணேசன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சியின் போது, கொழும்பு அவிசாவளை பென்றித் தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் அங்கு விபத்து ஏற்பட்டு, அயல் குடியிருப்பு மக்கள் பெரும் ஆபத்தை சந்தித்தனர்.
இதனால், மாற்று இடம் ஏற்பாடு செய்து, அதற்காக நான்கு ஏக்கர் காணியை, அமைச்சரவை பத்திரம் சமர்பித்து, நான் பெற்றேன். அதற்கான நிதியும் எனது அமைச்சினால் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதை பயன்படுத்தியே, இங்கே வாழும் தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கி தரப்பட்ட இந்த நான்கு ஏக்கர் காணியை, தோட்ட நிறுவனம் தந்திரமாக அபகரிக்க முயன்றுள்ளது.
ஒருவேளை நான் மீண்டும் அமைச்சர் பதவியேற்று இதை செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை.
துர்முயற்சி
எது எப்படி இருந்தாலும், எனக்கு எதிரணியும் ஒன்றுதான். ஆளும் அணியும் ஒன்றுதான். தற்போது இந்த துர்முயற்சி நிறுத்தபட்டுள்ளது.
இது தொடர்பில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துரையாடி, காணி துண்டுகளை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நாம் பிரித்து வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது, எம்.பி மனோகனேசனுடன் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், பாலசுரேஷ் குமார், பிரியாணி குணரத்ன, பாலச்சந்திரன் அப்பாதுரை, எஸ். தங்கதுரை மற்றும் மோசஸ் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.




