திட்டமிட்ட பின்னணியில் முறையற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம்!
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச உத்திதோகத்தர்களுக்கான முறையற்ற இடமாற்றம் கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜய குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது திட்டமிடப்பட்ட இடமாற்றமாகும் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கவனயீர்ப்பு போராட்டம்
“திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவில் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடாத்தியுள்ளார்கள்.
இது திட்டமிட்டு அரச உத்தியோகத்தர்கள் மீது இடம் பெறும் ஒரு செயலாகும். தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்வதனால் வாழ்வாதார, குடும்ப நிலை என்னவாகும்?
இதனால் மாதாந்த சம்பளம் குடும்ப செலவுக்கு போதியளவு இல்லாத நிலையில் போக்குவரத்துக்கே போதுமானது.
மேலும், இதனை நாடாளுமன்றில் இதனை கொண்டு சென்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடயத்தை பேசி அவர்களுக்கு கரம் கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.