அமெரிக்க கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் - 11 பயணிகள் மீட்பு
அமெரிக்காவின் மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் விபத்துக்குள்ளான தனியார் விமானத்தில் இருந்து 11 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் கடலில் விழுந்த நிலையில், நடுக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் உயிர் காக்கும் படகுகள் மூலம் காப்பாற்றி விட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையினர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மணிநேர முயற்சிக்குப் பின்னர், அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவற்படையினர் விமானத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
பஹாமாஸிலிருந்து புறப்பட்ட இந்த இரட்டை எஞ்ஜின் விமானம், ஃப்ளோரிடாவின் மெல்போர்ன் பகுதியிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் மீட்பு
விமானம் கடலில் விழுந்ததையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மேலதிக உயிர் காக்கும் மிதவைகளை மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டரிலிருந்து வழங்கியதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றையும் கொடுத்து உதவியுள்ளனர்.

இதனையடுத்து, சுமார் ஐந்து மணிநேரம் போராடி ஹெலிகொப்டர் மூலம் அனைவரையும் மீட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தின் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுவதோடு, பஹாமாஸ் அதிகாரிகள் இந்த விமான விபத்து தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 11 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக மெல்போர்ன் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.