வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட இடம் இதுவென குறிப்பிடப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா, பிள்ளையான் பிரிந்த பிறகு, இந்த முகாம் பிள்ளையானின் குழுவினரால் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
சித்திரவதை முகாம்
பேராசிரியர் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் போது கடத்தப்பட்டு, வெலிகந்தை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவர், சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் ஏராளமானோர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்ட பல நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் கூறியுள்ளார். இந்த முகாம் 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். முகாம் இருந்த காலத்தில், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வலியால் அலறும் சத்தங்களை தொடர்ந்து கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவு
சத்தம் தாங்க முடியாததாகவும், முகாமில் இருந்து அவ்வப்போது குப்பை நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். போர் முடிந்த பிறகு, விவசாயிகள் இந்த முகாமை சுற்றியுள்ள நிலத்தை நெல் பயிர் செய்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் முகாம் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் முகாம் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு அந்த இடத்தை கண்காணித்து வருகிறது.
இந்த முகாமில் தங்கியிருந்த பிள்ளையானின் தரப்புடன் தொடர்புடைய பலரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த இடம் ஒரு சித்திரவதை முகாமாக நடத்தப்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் உடல் ஒரு ஓடையில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |