காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
பதுளை மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காப்புறுதி நிறுவனங்களின் முகவர்களாக மாறி வருவதாக பொதுமக்களால் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாநகர சபையின் சில பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு காப்புறுதித்திட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதாக கையொப்பமற்ற எழுத்துப்பூர்வ முறைப்பாடு கிடைத்துள்ளதாக பதுளை மாநகர ஆணையாளர் ஜகத் பிரியஷான் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த ஜகத் பிரியஷான், அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏற்கனவே கடைகள் இல்லாத பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காப்புறுதித் திட்ட விற்பனை
பதுளை மாநகர சபையின் மற்றுமொரு உள்ளூராட்சி சபையிலிருந்து அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரொருவர், காப்புறுதி நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தின் காப்புறுதித் திட்டங்களை விற்பனை செய்வதற்கு தனது பொதுச்சுகாதார பரிசோதகர் பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் பல பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பொதுமக்கள், வர்த்தகர்கள் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகங்கள் மற்றும் கடைகளில் சோதனைகளை மேற்கொள்ளல், மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயல்முறை உட்பட பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
பொதுமக்களின் முறைப்பாடு
அவ்வாறான நிலையில் ஒருசில பொது சுகாதார பரிசோதகர்கள் தாங்கள் முகவர்களாக உள்ள காப்புறுதி நிறுவனத்திற்கு, வர்த்தகர்களின் காப்புறுதித் திட்டங்களை மாற்றுமாறு அழுத்தம் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
அவ்வாறு காப்புறுதித்திட்டங்களை மாற்றினால் வர்த்தக நிலையங்களின் காணப்படும் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடவும், அபராதங்கள் விதிக்காமலும் இருப்பதாக அவர்கள் வர்த்தகர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக பொதுமக்களின் முறைப்பாடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான சுகாதார பரிசோதகர்களின் செயல்கள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 23 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
