அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்: உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தேரரும் பேராயரும்
கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லே குணங்ச தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அரசாங்கம் அந்த அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் மனுதார்கள் கேட்டுள்ளனர்.
அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
யுகதனவ் மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துடன் அண்மையில் அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.