யாழில் வயோதிப பெண் வீட்டில் கொள்ளையிட முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்ணை, வீட்டின் அறையொன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்ற நபர் ஒருவரை அயலவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (25.04.2023) இடம்பெற்றுள்ளதாகக் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் வயோதிப பெண் வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டிலுள்ள அறை ஒன்றில் பூட்டி விட்டு, வீட்டினுள் தேடுதல் நடத்தியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
அந்தவேளை, அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண் அபாய குரல் எழுப்பவே, அயலவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்து நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, வீட்டின் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த பெண்ணை அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர். அதேவேளை, வீட்டில் இருந்த பொருட்கள் கலையப்பட்டு காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து , வீட்டில் இருந்து தப்பிச் சென்ற நபரை ஊரவர்கள் தேடி மடக்கிப் பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அந்நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது பையில், பித்தளை பொருட்கள் சிலவும் காணப்பட்டுள்ளன.
கைது
குறித்த நபரிடம் தன்னை அடையாளப்படுத்தக் கூடிய எந்த ஆவணங்களும் இருக்கவில்லை.
பின்னர், கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, பொலிஸாரிடம் அந்நபரை
ஒப்படைத்துள்ளனர். அந்நபரைக் கைது செய்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு பகுதியில் வயோதிகர்கள் ஐவர் படுகொலை
செய்யப்பட்டு, அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்த வீட்டின் அருகில் வசிக்கும்
அயலவர்கள் மத்தியில் மேலும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் - கண் இமைக்கும் நேரத்தில் ட்ரோன்களை வீழ்த்தும் News Lankasri
