ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் ஆசிரியர் சங்கம்
ஊவா மாகாணத்தில் தனிப்பிரிவாக இயங்கி வந்த தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டமை குறித்து மக்கள் ஆசிரியர் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய மாகாணத்திலும் ,ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சு தனிப் பிரிவாக இயங்கியமையினால் தமிழ் கல்வியில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய நிலை இருந்தது.
13வது சீர்திருத்தத்தில் இது சட்ட ரீதியாக இல்லாதபோதும் இந்த அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தன.எனினும் இனவாத ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த அமைச்சுக்களை நீக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இனவாத ஆட்சியாளர்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டும், 20ம் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தும் வந்த கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த தீர்மானத்தை கண்டிப்பதாக கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும் என்று மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ் கல்வி அமைச்சுகளில் இருந்த அமைச்சர்கள் செய்த அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் மத்தியில் தமிழ் கல்வி பிரிவு மீதும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. எனவே தமிழ் கல்வியை அபிவிருத்தி செய்யக்கூடிய சரியான அரசியல் தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் தமிழ் கல்வி அமைச்சுக்களை ஏற்படுத்தி கல்வியை அபிவிருத்தி செய்யக்கூடிய, மக்களுக்காக உழைக்கக்கூடிய அரசியல் தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் நெல்சன் மோகன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.