தென்னிலங்கையில் திடீரென குவிந்த மக்கள் - கோவிட் தீவிரம் அடையும் என அச்சம்
காலி கோட்டையின் வெளிப்பகுதியில் பிரதேசத்தில் நேற்று மாலை பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்கூடியிருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மாலை நேரத்தில் குறித்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. எனினும் நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதனால் பாரிய அளவில் மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
அரசாங்கத்தினால் பூங்காக்கள், வெளியரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நடமாடும் இடங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றினை பயன்படுத்தும் போது முகக் கவசம் அணிதல் போன்ற சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி அதிக அளவிலான மக்கள் ஒன்றுக்கூடியதனை அவதானிக்க முடிந்துள்ளது.
காலி மாவட்டத்தில் இதுவரையில் பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த நாட்களாக தினசரி 200க்கும் அதிகமானோர் அங்கு அடையாளம் காணப்படுவதனால் அச்சமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.