நாடளாவிய ரீதியில் எரிபொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்: தொடரும் அவலம் (Video)
நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுகொள்வதற்காக மக்கள் தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தர கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (26) முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி மண்ணெண்ணைய் இன்மையால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் கடற்தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணையினை பெற்றுத்தரகோரி இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை10.30 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
இதனையடுத்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணையினை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த மனுவில், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
இருப்பினும் எரிபொருளானது எமது மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு போதுமானதாகயில்லை. அத்துடன் கடந்த 08.05.20222 அன்று தொடக்கம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணைய் வரவில்லை இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே கடற்தொழிலாளர்களின் இந்த நிலையினை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு கடற்தொழிலாளர்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணைத் தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருக்கின்றது. இதனால் கடற்தொழில் மாத்திரமல்லாது விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.
எரிபொருள் விநியோகம் செய்கின்ற பிராந்திய முகாமையாளர்கள் மண்ணெண்ணைய் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்து அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொட்டகலை
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் இன்று (26) அதிகாலை 2 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பல மணிநேரம் காத்திருந்த மக்களுக்கு 250 ரூபாவுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
இதனால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். குறைந்த பட்சம் ஐந்து லீற்றராவது வழங்கியிருக்கலாம், அவ்வாறு இல்லாமல் 250 ரூபாவுக்கு வழங்கினால், அதனை வைத்து என்ன செய்வது? இது பெரும் அநீதியாகும் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஒரு நாள் வருமானத்தை, தொழிலை இழந்தே வரிசையில் நின்றோம்.
ஆனாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என வரிசையில் காத்திருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன்
16 நாள்களுக்குப் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (26) மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 3,300 லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிக்கப்பட்ட நிலையில், இதனைப் பெறுவதற்காக, அதிகாலை தொடக்கம் ஆயிரக் கணக்கான மக்கள் வரிசைகளில் காத்திருந்துள்ளனர்.
இதன்போது, தலா ஒருவருக்கு 150 ரூபாய்க்கு, ஒன்றரை லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிப்பட்டதால், நுகர்வோருக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரால் நிலைமை சுமூகமாக்கப்பட்டது.
இதேவேளை சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி, மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதாகவும் வரிசையில் நின்ற பலர் குற்றஞ் சுமத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
அத்துடன் ஹட்டன் பகுதியில் உள்ள மற்றுமொரு எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை மூன்று மணிமுதல் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஹட்டன் சிபெட்கோ எண்ணை நிரப்பு நிலையத்திலிருந்து மல்லிகைப்பூ சந்தி வரை காத்திருந்துள்ளனர்.
இதன் போது மக்கள் வரிசை கிரம முறையிலிருந்து முந்திக்கொண்டு எண்ணை பெற்றுக்கொள்ள முயற்சித்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த எண்ணை நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த மக்கள் தொகையினை காரணமாக கொண்டு ஒருவருக்கு 300 ரூபாவுக்கு மாத்திரம் எண்ணை பெற்றுக்கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.
இதனால் பலர் பல மணித்தியாலங்கள் நின்றிருந்தும் ஓரிரு நாளைக்கு சமைப்பதற்கு போதுமான எண்ணையை மட்டுமே பெற்றுகொண்டுள்ளனர்.
இதனால் மக்கள் தங்களது வேலைகளையும் விட்டுவிட்டு வரிசைகளில் நிற்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
செய்தி: திருமால், கன்னிகன் சுந்தரலிங்கம்
மட்டக்களப்பு
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறிப்பாக மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால் கிழக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
மண்ணெண்ணெய் இன்மையால் தமது மீன்பிடி படகுகளைச் செலுத்த முடியாமலும் அதனால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமலும் அல்லலுறுகின்றனர்.
இதனால் தமது மீன்பிடி படகுகள் அனைத்தையும் நீண்ட நாட்களாக கரையோரத்தில் கடற்தொழிலாளர்கள் நிறுத்திவைத்துள்ளதுடன் பெரிய படகுகளை கடலின் நடுவே நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
வாரத்தில் ஓரிரு நாட்கள் வழங்கப்படும் எரிபொருள் தேவைக்கு போதாதுள்ளதாகவும் கொள்கலன்களில் எரிபொருள் தர எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவிப்பதாலும் தொடர்ந்தும் கடற்றொழில் நடடிவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மட்டக்களப்பு மாவட்த்தில் சுமார் 25 ஆயிரம் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: ருசாத்
வடமராட்சி
யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தில் எரிபொருளுக்கு இன்றைய தினமும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து நமது பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
இன்றைய தினமும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், பருத்தித்துறை துறைமுகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுச் சென்றுள்ளனர்.
டீசல் , மண்ணெண்ணெய் என்பன பல நாட்களாக விநியோகிக்கப்படவில்லை ஆனால் நேற்றும் இன்றும் வடமராட்சியிலுள்ள நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் தாங்கிகளில் கொண்டுவந்து நிரப்பிய நிலையிலும் வடமராட்சியில் எங்கும் டீசல் நிரப்பபடவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.