நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்: பொலிஸாரின் நடவடிக்கை (Photos)
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லியடி
நெல்லியடியில் இரண்டு நாட்களாக பெட்ரோலுக்காக காத்திருந்த மக்கள் எரிபொருள் கிடைக்காமல் வீடு திரும்பியுள்ளனர்.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக காத்திருந்த நிலையில் இன்று பொலிஸாரால் மக்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலைத்திற்க்கு பெட்ரோல் வரும் என மக்கள் மிக நீண்டவரிசையில் தமது வாகனங்களுடன் காத்திருந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் சில நாட்கள் பெட்ரோல் வராத என்றும் அனைவரையும் கலைந்து செல்லுமாறு தெரிவித்ததற்க்கு அமைவாக அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று டீசல் விநியோகம் இடம் பெறுகிறது. டீசலை பெறுவதற்கு மக்கள் தமது வாகனங்களுடன் மிக நீண்டவரிசையில் காத்திருந்து டீசலை நிர்ப்பி செல்கின்றனர்.
அத்துடன், நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக க.பொ.த சாதாரண தர விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமக்கு எரிபொருள் வழங்க கோரி இன்று காலை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று வரை சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விடைத்தாள் மதிப்பீட்டு கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று குறித்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என்ற பொலிஸாரின் நெல்லியடி பொலிஸ் பொறுப்திகாரியின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மதிப்பீட்டு பணிகள் இடம் பெறுகின்றன.
எரிபொருள் தமக்கு முறையாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யாவிடின் நாளை முதல்
மதிப்பீட்டு பணியில் ஈடுபடமாட்டோம் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி : எரிமலை
வவுனியா
ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருந்தும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் நேற்று (19) அதிகாலை தொடக்கம் மக்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் சுமார் 3km தூரம் வரை வரிசையில் காத்திருந்திருக்கின்றார்கள்.
IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் காலை 9 மணிக்கு பின்னர் பெட்ரோல் அடிக்க தொடங்கி குறிப்பிட்ட நேரத்தின் பின் பெட்ரோல் முடிந்துவிட்டது என நிறுத்தியிருக்கின்றார்கள்.இதனாலே அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பெட்ரோலை வைத்துக்கொண்டு பெட்ரோல் முடிந்துவிட்டது என கூறி தம்மை அலட்சியப்படுத்துவதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்ததோடு குறித்த எரிபொருள் நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டு மக்கள் ஏ9 வீதியினை மறித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரினால் பெட்ரோல் பெற்று தருவதாக கூறப்பட்டு குறித்த போராட்டம் மக்களால் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்கள் எரிபொருளுக்காக இன்று பிற்பகல் வரை காத்திருந்தும் இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பாவனையாளர் அதிகார சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டும் இதுவரை அவர்கள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பு அதிகாரி ஜெ.ஷாதிக் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது, "எங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைடுத்து இன்று (20) நேரடியாக கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.
அங்கு சென்ற போது காரியாலயம் பூட்டப்பட்டு முகாமையாளரோ அல்லது அங்கு பணியாற்றும் ஊழியர்களோ யாரும் இருக்காததன் காரணமாக பரிசோதனைக்குட்படுத்த முடியவில்லை. பெட்ரோல் இருப்பதாகவே அவ்விடத்தில் நின்ற பொதுமக்களின் கருத்து அமைந்திருந்தது. இவ்விடயம் குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக" மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாரால் எரிபொருள் நிலையத்தினுடைய முகாமையாளருக்கும், IOC பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் குறித்த விடயத்தினை பரிசோதனைக்குட்படுத்துமாறு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னாள் ஆளுனர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : ஷான்