கந்தளாய் போட்டான்காட்டு வீதி சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதி..
கந்தளாய் - போட்டான்காட்டு சந்தியிலிருந்து 7ஆம் வாய்க்கால் நோக்கிச் செல்லும் பிரதான வீதி கடுமையாக சேதமடைந்து, குன்றும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் இந்த வீதியூடாக லொறி, வேன், முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் பயணித்த நிலையில், தற்போது மோட்டார் சைக்கிள்கள் கூட மிகுந்த சிரமத்துடன் பயணிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
குறிப்பாக, சுமார் 100 மீற்றர் நீளமுள்ள ஒரு பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெறும் 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பகுதிகளை சென்றடைய மக்கள் தற்போது சுமார் 11 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த வீதியினைப் பயன்படுத்தி சீனிபுர, வட்டுக்கச்சி, அக்போபுர, மெதகம மற்றும் வெவசிறிகம உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கந்தளாய் நகரை வந்தடைகின்றனர்.
இதனால் அன்றாடம் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர கவனம் செலுத்தி, சேதமடைந்துள்ள 100 மீற்றர் வீதிப் பகுதியை உடனடியாக புனரமைத்து மக்களின் போக்குவரத்து துயரத்திற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு