அரசாங்கத்திற்கு எதிராக சவப்பெட்டியுடன் வீதிக்கு இறங்கிய மக்கள் (VIDEO)
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அதிகரித்து வரும் விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சியாளர்களை வெளியேற கோரியும்,பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கொட்டகலை நகரில் அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (05) கொட்டகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சவப்பெட்டியினை வைத்து அதிகரித்து வரும் பொருட்களின் விலையினை கூறி ஒப்பாரி வைத்து தப்படித்து அழுது ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் ஒழிய வேண்டும் எனவும் கோசமிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் சவப்பெட்டியினை சுமந்த வண்ணம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஒழிய வேண்டும் என கோசமிட்டவாறு கொட்டகலை டிரேட்டன் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்து கொட்டக்கலை புகையிரத கடவை வரை சென்றுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள், இளைஞர்கள்,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.