வீதியில் இறங்கிய மக்கள் : சிக்கிய கோட்டாபய?? நடக்கப்போவது என்ன?
உலகளாவிய ரீதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்கொட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 2030 ஆம் ஆண்டிற்குள் காபன் வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது மற்றும் பூமியின் நிலைபேறுகைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடவுள்ளனர்.
மனிதர்களால் ஏற்படும் சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியிடப்படும் காபன் காரணமாக உலகம் வெப்பமடைந்து வருவதால், காலநிலை பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த மாநாடானது, 'உலகின் உண்மையின் தருணம்' என்று பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
இந்த தருணத்தை நாம் கைப்பற்றுகிறோமா அல்லது அதை நழுவ விடுகிறோமா என்பதை அனைவரும் தமக்குத் தாமே கேள்வியாகக் கேட்க வேண்டும் என மாநாட்டிற்கு முன்னர் பொறிஸ் ஜோன்சன் வலியுறுத்தியிருந்தார். உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, மாநாட்டின் முதல் நாளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் தற்போதுள்ள வெப்பநிலையை ஒப்பீடு செய்து, காலநிலை தொடர்பான விஞ்ஞானிகள் உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தின் அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 26வது காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rayapaksa) ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கவும், பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றி பேசவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு கிளாஸ்கோவில் நவம்பர் 01 முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது. நவம்பர் 01 மற்றும் 02 திகதி உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்வார்கள். ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் இதுவே மிகப் பெரிய மாநாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(G.L.Piris), சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியுடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் கிளாஸ்கோ நகரில் தங்கியிருக்கும் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களின் போராட்ட முனைப்புகள் தீவிரமடைந்துள்ளன.
ஈழத் தமிழினத்தின் மீது இனப்படுகொலையைச் செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதால் இந்த மாநாட்டில் அவர் பங்கெடுக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியும், போர்க்குற்றங்களுக்கு அவரை பொறுப்புக்கூற வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோர அழுத்தம் கொடுக்கும் வகையிலும் மாநாடு இடம்பெறும் நிகழ்வு வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்று வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ்மக்கள் லண்டன், பிரான்ஸ் உட்பட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் மக்கள் கிளாஸ்கோவுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கிளாஸ்கோவில் தங்கியுள்ள இலங்கை அரச தலைவருக்கு எதிராக ஸ்கொட்லாந்து தமிழர்கள் சமூகவலைத்தள பதிவுகள் ஊடாக கடுமையான எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்த விடுதியை அதிகாலையிலே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கோட்டாபயவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி தமிழ் மக்கள் அங்கு ஹோட்லின் முன் திரண்டிருப்பது பல்வேறு உலகத் தலைவர்களினது கவனத்தை ஈர்த்து வருவதாகவும், இலங்கைக்கு பலத்த சங்கடங்களை விளைவித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஸ்கொட்லாந்தின் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் கடந்த 31 ஆம் திகதி ஞாயிறு பதிப்புகளிலும் இலங்கை இராணுவத்தின் தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் முழுப்பக்க ஆக்கங்கள் வெளியாகி இருந்தன.
தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளி ஒருவர் கிளாஸ்கோ நகரில் தங்கிநிற்கும் செய்தியைத் தாங்கிய ஆக்கங்கள் ஸ்கொட்லாந்தைத் தளமாகக்கொண்டு வெளிவரும் முக்கிய பத்திரிகைகளிலும் வெளியிட்டுள்ளன.
இந்த ஆக்கத்துடன் இணைக்கப்பட்ட பெரிய ஓவியத்தில் தமிழர் தாயக மண்ணில் படுகொலையுண்ட தமிழ்மக்களின் மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் காணப்படும் நிலையில் அந்த மண்ணின் மேற்பரப்பில் மீதான இலங்கை இராணுவ உறுப்பினர்கள் மரங்களை நாட்டி வருவதான காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்களை அனேக ஸ்கொட்லாந்து வாசிகள் வாசித்திருப்பதாக நம்பப்படுகிறது. கோட்டாபாய தங்கிநிற்கும் விடுதியின் வரவேற்புக்கூடத்துக்கு விநியோகிக்கப்படும் செய்தித்தாள்களிலேயே இந்த ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கொட்லாந்தில் வெளியாகும் பிரதான செய்தித்தாளான தி. ஹெரல்ட் பத்திரிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தமாக முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட அந்நாட்டில் வாழும் தமிழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து பொலிஸார் மனித உரிமை மீறல்களுக்குப் பயிற்சியளிக்காமல் விசாரணை நடத்த வேண்டும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து, ஸ்கொட்லாந்தில் வாழும் சிங்கள மக்கள், அடுத்த சில தினங்களுக்குள் அதே பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தொடர்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக மேற்கொண்டுவரும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருகின்றார்கள்.
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒரு தேடப்படும் குற்றவாளி' என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட மர்ம வாகனங்கள் கிளாஸ்கோ நகரம் முழுவதும் நடமாடித்திரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட பெற்ற போர்க்குற்றங்களுக்கு உரிய குற்றவாளிகள்
நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள்
தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்திகளும் அங்கு விடுக்கப்பட்டு வருவதையும்
போராட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதைக் காணமுடிகின்றது.