அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக்க பண்டார இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களினதும் நியமனக் கடிதங்கள் திருத்தப்படும்.
சுற்றறிக்கை
அதன்படி, குறித்த நியமனக் கடிதங்களில் “இந்த நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியது. மேலும், நீங்கள் விதவை மற்றும் அநாதைப் பிள்ளைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கும், விதவை கணவர் மற்றும் அநாதைப் பிள்ளைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கும் பங்களிக்க வேண்டும். அரசாங்கத்தினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் முறைக்கு அமைய நீங்கள் அதற்கான பங்களிப்புப் பணத்தைச் செலுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களிலும் ஓய்வூதிய உரிமைகள் வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.