அக்கறைப்பற்று பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள்
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வீதிகளில் அலட்சியமாக நடந்து செல்பவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மக்களுக்கு கோவிட் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வுகள் குறித்து வீதி வீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வீணாக வீதிகளில் நடமாடுகின்ற நபர்களுக்கு பி.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப் .எம் .ஏ. ஜனாப் காதர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் அதிகரித்து வருகின்ற கோவிட் தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும் முகமாகவும், வீதிகளில் பொருட்படுத்தாது நடமாடுகின்றவர்களையும் மற்றும் சுகாதார விதி முறைகளை பேணாத வியாபாரிகளையும் கட்டுப்படுத்துவதற்காக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனைகள் அக்கரைப்பற்று காதிரியா வீதி மாவடிப்பள்ளி வீதி வெள்ளப்பாதுகாப்பு வீதிகளிலும் மற்றும் அக்கரைப்பற்று 06 ம் குரிச்சியிலும் மேற்கொள்ளப்பட்டன.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் விதி முறைகளை கவனத்திற்கொள்ளாது வீதிகளில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் களமிறங்க அவர்களது பங்களிப்புக்களை வழங்கியமை முக்கிய அம்சமாகும்.
எனவே தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்து இந்த
அபாயகரமான கோவிட் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.