கொழும்பு வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்கள்!
கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிசனின் தேவையும், சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளில், 50 முதல் 60 வீதமான பரிசோதனைகளில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பெருமளவிலான நோயாளர்கள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பதிவாகலாம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் சகல படுக்கைகளிலும் தற்போது கோவிட் நோயாளிகள் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அந்தோனி மென்டிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.