ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சி! - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, எதிர்க்கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு இன்று கோரப்பட்டதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தன்னை நாடாளுமன்றத்தில் வைத்து தாக்கியதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி வெலிகட பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்திற்குச் சென்ற வெலிகட ஓ.ஐ.சி, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியிடம் முறைப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பின்னர் ஹரின் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
