மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை தீவிரம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்தபோது மண்ணிற்குள் சிக்குண்டு கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(30.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளன்டில் தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை விரிவுபடுத்துவதற்காக நிலத்தை வெட்டிச் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்பாராதவிதமாக பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண் திட்டு சரிந்து போதகர் உயிரிழப்பு
அதில் மண்ணுக்குள் புதையுண்டு ஆபத்தான நிலையிலிருந்த போதகர், உடனடியாக மீட்கப்பட்டு மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நடுவத்தை தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (வயது 41) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தையிட்டி விகாரையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!