மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியானது நேற்று மாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாமாங்கம் பகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டு வரும் நிலையில் குறித்த பகுதியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸாரும் ,இராணுவத்தினரும் நேற்றுமாலை குவிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
மாமாங்கம் ஊடாக செல்லும் அனைத்து பிரதான வீதிகளும் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதுடன், குறுக்கு வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மாமாங்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் இந்த மாதம் 39 பேருக்கு மேல் மாமாங்கம் பகுதியில் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பின்பற்றி நடக்காத காரணத்தினாலேயே தொற்று நிலை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.