இலங்கையில், இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளின் மாநாடு! இலங்கை வரும் அமெரிக்க குழு
மூன்று நாடுகளின் மாநாடு
சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நிதியுதவி முறை
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், இலங்கைக்கு உதவி வழங்கும்போது, வெவ்வேறு முறைகளை கையாளுகின்றன.
எனினும் குறித்த மாநாட்டின்போது, மூன்று நாடுகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் முறையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இன்று இந்திய குழு இலங்கை வரும் நிலையில், அமெரிக்க திறைசேரியில் இருந்து ஒரு சிறப்புக் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.