கோட்டாபய- புடினுடன் பேசினால் மாத்திரமே, ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கிடைக்கும்!
ரஷ்யாவில் இருந்து எரிபொருள்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொடர்பு கொண்டால், இந்தியாவை போன்று இலங்கைக்கும் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை குறைந்த விலையில் இறக்குமதி செய்யமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இதுவரையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்றுள்ளன.எனினும் இது அரச தலைவர்கள் மட்டத்தில் இடம்பெறுமாக இருந்தால், தீர்வை எட்டமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று தமது குழுவினர், ரஷ்ய துாதுவரை சந்தித்தபோது, இந்த யோசனையை துாதுவரே தம்மிடம் கூறியதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்
உயர்மட்ட குழுவின் மொஸ்கோ பயணம்
அரச தலைவர்கள் மத்தியில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையில் இருந்து உயர்மட்டக் குழு ஒன்று ரஷ்யாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை தொடரமுடியும் என்றும் துாதுவர் தெரிவித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதே காரணம் என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.