இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மரியாதை செலுத்திய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்
போரில் இறந்த படையினருக்கு மரியாதை செலுத்துகின்ற அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இன்று வெற்றி தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், அந்த போரில் பலியான படையினருக்கு தாம் மாியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.
அதேநேரம், தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு இறந்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார்.
இதேவேளை தாம் அரசியல் வாழ்க்கையில் அதிகமாக விமர்சித்த ரணில் விக்ரமசிங்க, இன்று பிரதமராக பதவியேற்றமை குறித்த தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
அவர் சர்வதேசத்தில் நற்பெயரைக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் 225 பேர் செய்ய முடியாத காரியமான சர்வதேச செல்வாக்கை, அவர் பெற்றிருக்கிறார்.
எனவே அவருக்கு நாடாளுமன்றின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை நாட்டில் இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில், இன்று பொதுமக்கள் உணவுக்காக கஸ்டப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல.
எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார். '