நீதிக்கு புறம்பாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மூன்றாம் குடிமகனுக்கு கடிதம்- நாடாளுமன்றில் கடும் ஆட்சேபம்!
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நாட்டின் மூன்றாவது குடிமகனான பிரதம நீதியரசருக்கு,சட்டத்துக்கு முரணான வகையில் கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்படும், இராணுவ அதிகாரியான ஜெகத் அல்விஸே, பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரருக்கு கடிதம் எழுதவேண்டுமானால், அல்லது எதனையும் கூறவேண்டுமானால், ஒருவர் சட்டமா அதிபர் ஊடாகவே மேற்கொள்ளமுடியும் முடியும்.
எனினும் கடந்த 12ஆம் திகதியன்று ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், போராட்டங்களை தடுப்பதற்காக பொலிஸ் தரப்பு கோரிக்கை விடுத்தபோதெல்லாம், கனிஸ்ட நிலை நீதிவான்களால் அவை நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும்.
நாட்டின் மக்கள் இன்று நாடாளுமன்றின் 225 பேரும் வேண்டாம் என்று கூறும்போது நீதியை எதிர்பார்க்கும் இடமாக நீதிமன்றங்களே உள்ளன. இந்தநிலையில் நீதிமன்றங்களையும் செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது என்றும் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.