அரசியல் குரோதத்துக்கு மத்தியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்!
இலங்கையின் நாடாளுமன்றில் நேற்று சர்வக்கட்சி அமர்வின் முதல் நாளில் ஆளும் தரப்பும் எதிர்தரப்புக்கும் மத்தியில் இணக்கம் என்பதை காணமுடியவில்லை.
ஆரம்பம் முதலே இரண்டு தரப்புக்களும் முரண்பட்டுக்கொண்டன.
இந்த முரண்பாட்டின் உச்சக்கட்டமே, பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரோஹினி கவிரட்ன முன்மொழியப்பட்டதும், அதற்கு எதிராக ஆளும் தரப்பில் அஜித் ராஜபக்ச முன்மொழியப்பட்ட நிகழ்வாகும்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலை கருதி இணக்கம் தேவை என்ற அடிப்படையில், பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய ஒருவர் விரும்பினால் விலகிக்கொள்ளலாம் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டபோதும் அதற்கு இருவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்காரணமாக பெண் ஒருவர் பிரதிசபாநாயகராக வரும் சந்தர்ப்பம் கைநழுவிப்போனதுடன், ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் இணங்கிச்செல்ல வாய்ப்பில்லை என்பதற்கு கட்டியம் கூறுவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
எனினும் இரண்டு தரப்பும், தமது அரசியல் குரோதங்களை மறந்து, ஒருமித்த சிரித்த இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஆளும் கட்சியை பிரதமரால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய ரணில் விக்கிரமசிங்க, ஒரு கட்டத்தில் தமக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்க முடியாது. எதிர்கட்சியின் கூட்டத்திலும் பங்கேற்க முடியாது. எனவே “தாம் இப்போது பாலம் ஒன்றை கட்டிவிட்டு எங்கே போவது என்று தெரியாமல் அதன் ஆரம்பத்தில் நின்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியபோது முழு சபையினரும் குரோதங்களை மறந்து சிரித்தனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கொண்டு வந்த ஜனாதிபதி தொடர்பான யோசனையின்போது இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சிலரின் விருப்பங்கள் வாக்குகள் சபாநாயகரால் பெயர் குறிப்பிடப்பட்டு வாய்மூலமாக கோரப்பட்டன.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, ஒரு கட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அழைத்தபோது தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச என்று அழைத்து விட்டார்.
இதன்போது எழுந்த சரத் பொன்சேகா உட்பட்ட முழு சபையினரும் சிரித்தனர்.
எனினும் சபாநாயகர் தாமும் சிரித்தப்படி சுதாகரித்துக்கொண்டு தமது தவறை ஒப்புக்கொண்டு (மட்ட வெருதுனா) சரத் பொன்சேகா என்று சரியாக பெயரை உச்சரித்தார்.