இந்திய கடன்களை பெறும் இலங்கை அரசாங்கம்! மலையக மக்களுக்கு புரியும் துரோகம் (VIDEO)
மலையக மக்களுக்கு துரோகம்
மலையக மக்களுக்கு தொடர்ந்தும் இலங்கையில் புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கிடைக்கின்ற கடன்களை மாத்திரம் விருப்பமாக பெற்றுக்கொள்கின்ற இலங்கை அரசாங்கம், ஏன் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளிகளுக்கு துரோகம் செய்கிறது என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இந்த குற்றச்சாட்டை இன்று கேள்வி எழுப்பினார்.
பதுளைக்கு 100 மில்லியன் ரூபா
பதுளை மாவட்டத்துக்காக கடந்த அரசாங்க காலத்தில் 68 பெருந்தோட்டங்களை மையப்படுத்தி 18 கலாசார மையங்களை அமைப்பதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த மையங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு அடிக்கற்களும் நாட்டப்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்காக 20.5 மில்லியன் ரூபாய்கள் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளன.
எனினும் பெருந்தோட்டங்களில் இடங்கள் கிடைக்காமை காரணமாகவே இந்த மையங்கள் அமைக்கப்படவில்லை என்று அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இது முழுமையாக பொய்யான தகவல் என்று குறிப்பிட்ட வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட மக்களை ஏன் இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
மலையக மக்கள் பயங்காவாதிகள் அல்லர்
மலையக மக்கள் பயங்கரவாதிகளல்லர். நாட்டுக்கு எதிராக செயற்படவில்லை. எனினும் அவர்களுக்கு எதிராகவே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு தேசிய குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தினார்.
மலையக மக்கள் ஏற்கனவே இரண்டு வேளைகளுக்கே உணவை உட்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பதில்
இந்தியா வழங்குகின்ற கடன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் ஏன், இந்திய வம்சாவளிகளை மாத்திரம் ஏமாற்றி வருகிறது. ஏன் அவர்களுக்கு துரோகம் செய்கிறது என்று வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை புறக்கணிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.