நாடாளுமன்றத்தில் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை யார் முன்வைக்க வேண்டும் என்று விவாத்தின் போது இன்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் முரண்பட்டுக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவும், ஆளும்கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியும் ஒருவரை ஒருவரை தள்ளிக்கொண்ட சம்பவமும் இடம்பெற்றது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கொண்டு வந்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவிடம் இந்த விவாதத்தை நகர்த்த எதிர்கட்சியை அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும் இந்த விவாதத்தை முன்கொண்டுவர ஆளும் கட்சியை அனுமதிக்க எதிர்க்கட்சி ஒப்புக் கொண்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வாதிட்டார். அத்துடன் முன்னைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் பாதிப்புக்குள்ளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்த விவாதத்தை நகர்த்த தார்மீக உரிமை உள்ளது என்று அவர் வாதிட்டார்.
இதன்போது வாக்குவாதங்களுக்குப் பின்னர் இறுதியாக பதற்றம் ஏற்பட்டது. அரசாங்க உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்க்கட்சியினர் கொலைகாரர்கள் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிமின் படங்களை வைத்திருந்தனர்.
அரசாங்க உறுப்பினர்கள் கறுப்பு துணிகளை கைகளில் கட்டியிருந்தனர் ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் திஸ்ஸ குட்டியராச்சி ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்ட சம்பவமும் பின்னர் சண்டையை தவிர்க்கும் சம்பவங்களும் இடம்பெற்றன.