நாடாளுமன்றத்தை ஏமாற்றிய திறைசேரி! கடன் பொறி உருவானதை கண்டுபிடித்த மத்திய வங்கி ஆளுநர்
தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்து திறைசேரி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே குறைக்க முடியாத செலவீனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தும், தவறான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்து நாடாளுமன்றம், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூறப்பட்டபடி, வருமானம் வெளிப்படையாக வரவில்லை. பணம் அச்சிடுதல் அல்லது ஏனைய நிதி பல்வேறு வழிகளில் இந்த வருவாய் மதிப்பீடு காட்டப்பட்டுள்ளமையால், செலவீனங்களுக்கு ஏற்ப கடனை அதிகரிக்கவேண்டியிருந்தது.
இதன் காரணமாகவே கடன் பொறி உருவானது என்று நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக மாத்திரம் இலங்கைக்கு சுமார் 600 அல்லது 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மின்சார சபை, எரிவாயு நிறுவனம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு போதுமான ரூபாய்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.