பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதைத் தடை செய்ய வேண்டும் - மனோ
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள்.
இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளைத் தடை செய்யப் போகிறது என்ற புரளியைக் கிளப்பி மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்றார்கள். உண்மையில் இந்த நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதைத் தடை செய்யத்தான் வேண்டும்.
நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன். ஆனால், இந்த அரசு இப்போது இவர்களைத் தடை செய்து தற்கொலை செய்யப் போவதில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீது, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என மேற்படி பௌத்த தேரர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது. தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும்.
ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கின்றது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிப் பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாகக் காட்டுகின்றார்கள்.
ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள் கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியைத் திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கின்றார்கள்.
அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள். இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது.
அது ஓர் இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.
இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக,
பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பின்னர்
சாம்பலில் இருந்து எழுந்துவர வேண்டியதுதான்" - என்றார்.