நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பறித்த ஆளும் உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சேகரிப்புக்கு தடையேற்படுத்தி தமது கையடக்க தொலைபேசிகளை பறித்தமை சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வீரசிங்க, இந்திக அனுருத்த மற்றும் சன்ன ஜயசுமண ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாடு நேற்று செய்யப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கூறியுள்ளது. நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரகீத் பெரேரா மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் கசுன் சமரவீர ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளே பறிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் முடிந்து வெளியில் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காட்சிகளை வழமையாக ஒளிப்பதிவு செய்வது போல் செய்துக்கொண்டிருந்த போதே இவர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த ஊடகவியலாளர் பிரகீத் பெரேராவின் மார்பில் கை வைத்து தள்ளி சுவரில் சாய்த்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.
இதன் பின்னர் இந்திக அனுருத்தவும் டி வீரசிங்கவும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பறித்துள்ளதுடன் சன்ன ஜயசுமண அதற்கு உதவியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் தொலைபேசிகளை மீண்டும் ஊடகவியலாளர்களிடம் கையளித்தார் என நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கூறியுள்ளது.