மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்மா வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு - மக்கள் விசனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு ஆடைப்பால் மா வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், இதேவேளை சில வத்தக நிலையங்களில் இரு பால்மா வகையின் தயாரிப்புக்களான யோக்கட், தேயிலை வாங்கினால் அந்த பால்மா வகைகளை வாங்கக் கூடியதாக உள்ளது எனப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மாவட்டத்திலுள்ள மொத்த வியாபார நிலையங்கள் மற்றும் சுப்பர் மாக்கட் மற்றும் சிறிய கடைகள் உட்பட மாவட்டத்திலுள்ள கடைகளில் முழு ஆடைப்பால் மா வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில்,
பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக அறிந்த பணமுள்ள தனவந்தர்கள், மொத்தவிற்பனை கடைகள் மற்றும் சுப்பர் மாக்கற்றுக்கள் உட்படக் கடைகளில் முழு ஆடைப்பால் மா வகைகளை மொத்தமாக வாங்கி சென்றுள்ளனர்.
பால்மா விநியோகிக்கும் கம்பனிகள் பால்மா கொழும்பிலிருந்து வரவில்லை எனத் தெரிவித்து பால்மா விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சில நிபந்தனையுடன், சில பால்மாக்களை அந்த கம்பனிகள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்த போதும் அதனை வர்த்தகர்கள் பல ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் பால்மா வகைகள் தங்களிடம் இல்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சிறுவர்களுக்கான பால் மா வகைகள் மற்றும் கொழுப்பு அற்ற (நென்பற்) என்கின்ற பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை இருந்தபோதும் பால்மா வகைகள் சில கடைகளில் விற்கப்படுகிறது.
அதனை வாங்குவதாக இருந்தால் அந்த பால் மா கம்பனியின் தயாரிப்பான தலா 40 ரூபா பெறுமதியான 160 ரூபாவுக்கு யோக்கட் 4 வாங்கினால் 380 ரூபா பெறுமதியான 400 கிராம் பால் மாவை வாங்கமுடியும்.
அவ்வாறே பால் மா கம்பனியின் தயாரிப்பான 100 கிராம் தேயிலையை வாங்கினால் அந்த பால் மாவை வாங்கமுடியும் என சில வர்த்தக நிலையங்களில் இவ்வாறு வியாபாரம் இடம்பெறுகின்றது. அதேவேளை பால் மா வகைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையால் பால் மாவை மட்டும் வாங்க கஸ்ரப்படும் மக்கள் எவ்வாறு பால்மாவை வாங்கி பாலை குடிக்கமுடியும் என நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய நடவடிக்கை எடுத்து பால் மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.