பாகிஸ்தானில் புதிய இராணுவ தளபதியின் நியமனத்தால் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி
பாகிஸ்தானின் அடுத்த இராணுவத் தளபதியாக ஜெனரல் அசிம் முனீரை, பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப் நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது நாட்டின் அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரமடைய செய்யும் என சுட்டிக்காட்டப்படுவதுடன் மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் இராணுவத்துக்குமான மோதலையும் அதிகப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தகவல் துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் டுவிட்டரில் இந் நியமனம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
புதிய இராணுவ தளபதி
பாகிஸ்தானின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 29ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
அவர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய இராணுவ தளபதிக்கான பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை அதிபருக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பிவைத்திருந்தார்.
அதில், பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக இந்த நியமனம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதிபர் தாமதம் செய்யாமல் இன்றே ஒப்புதல் வழங்குவார் என்றும், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசியல் நெருக்கடி
இராணுவத்தின் உயரிய உளவுப் பிரிவான இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் தலைவரான முனீரை அவர் நியமிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குள் இம்ரான் கான் நீக்கியிருந்தார்.
அவருக்குப் பதிலாக தனக்கு நெருக்கமான ஒரு அதிகாரியை நியமித்தார். ஆசிம் முனிர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, புதிய இராணுவ தளபதி நியமனத்தால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.