இலங்கையின் கமத் தொழில் அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வம்
இலங்கையின் நெல் உற்பத்தி மற்றும் பழங்கள் பயிர்ச்செய்கை உள்ளிட்ட கமத் தொழில்துறை அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காநதவுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (25) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
அதன்போது, இலங்கைக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தி
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர், கால்நடை உற்பத்தியில் உலகளவில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளதால், அது சார்ந்த அறிவையும், விவசாய உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் இலங்கைக்கு வழங்க பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது.
பாகிஸ்தானைப் போன்றே இலங்கையும் ஒரு விவசாய நாடாகும் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

உலக அளவில் கால்நடை உற்பத்தியில், குறிப்பாகப் பால் உற்பத்தியில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே அந்தத் துறையில் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த முடியும்.
நாம் இலங்கைக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானில் சீனி உற்பத்தி, காய்கறி உற்பத்தி மற்றும் பழ உற்பத்தி போன்ற அனைத்துத் துறைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. எமது நாட்டில் சிறந்த பாஸ்மதி அரிசி வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கால்நடை உற்பத்தி
இலங்கைக்குப் பொருத்தமான பாஸ்மதி அரிசி வகைகளை உருவாக்கிக்கொள்ள எம்மால் உதவ முடியும். அத்துடன், பாகிஸ்தானில் உயர்தரமான, மிகவும் சுவையான மாம்பழ வகைகள் உள்ளன.
அவற்றை இலங்கையில் பயிரிட்டு கூடுதல் விளைச்சல் பெற முடியும். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் கமத்தொழில் அமைச்சின் பெயரை 'உணவுப் பாதுகாப்பு அமைச்சு' என மாற்றியமைத்தோம். நீர் இருந்தபோதிலும் அதனை விநியோகிப்பதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த நிலைமை குடிநீர் விநியோகத்தைப் போன்றே நீர்ப்பாசனத் துறையையும் பாதிக்கின்றது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு வருகை தந்து, அங்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுமாறு கமத்தொழில் அமைச்சருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.